'பூ' படத்தின் பாடல்களுக்காகப் பேசப்பட்டவர் அதன் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். அதன் பின்னர் 'களவாணி', 'விருந்தாளி', 'நெல்லு' ஆகிய படங்களுக்கும் இசையமைத்துவிட்டார். இவரே தயாரித்து, இயக்கியுள்ள படம்தான் இது.
கொடுமுடி சுரேஷ், ஆதித் சகோதரர்கள், கிராமத்து விசேஷங்களுக்கு பந்தல் போடும் தொழில் செய்பவர்கள். அண்ணன் சுரேஷுக்கு அத்தை மகளை திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. தம்பிக்குப் பிறகுதான் அண்ணனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று ஜோதிடர் கொளுத்திப்போட, தம்பிக்கு பெண் தேட ஆரம்பிக்கிறார் அண்ணன். அதே ஊரில் இருக்கும் சார்பதிவாளர் பிரபாகர், கடமை தவறாத அதிகாரி. அவரால் பாதிக்கப்படும் ஒருவர், அவரை அவமானப்படுத்துவதற்காக, அவரது மகள் பருவத்துக்கு வந்து விட்டதாகப் பொய் சொல்லி, பந்தல் போடச் சொல்கிறார். இரவோடு இரவாக பந்தல் போட்டு திரும்புகிறார்கள் சகோதரர்கள். இதனால் கொதித்தெழும் சார்பதிவாளரின் மகள் ரேஷ்மி, ஆதித்திடம் மல்லுக்கட்டுகிறார். கடைசியில் அதுவே காதலாகிறது.
குடிப்பவர்களைக் கண்டாலே பிடிக்காத சார்பதிவாளருக்கு குடிகார மருமகனை எப்படி பிடிக்கும் அமெரிக்க மாப்பிள்ளைக்கு மகளை கட்டி வைக்க முயற்சிக்கிறார். அப்பாவின் திட்டம் ஜெயித்ததா மகளின் காதல் ஜெயித்ததா என்பது மீதி கதை. ஆதித் தாடி வைத்த ஜெய்யின் காப்பியாக இருக்கிறார். முகபாவம், மேனரிஸத்திலும் அவரையே ஞாபகப்படுத்துகிறார். சமீபகாலமாக இதே மாதிரியான கிராமத்து தெனாவட்டு ஹீரோக்களை நிறையவே பார்த்து விட்டதால், ஆதித் கேரக்டர் இம்ப்ரஸ் செய்யவில்லை. ஹீரோயின் ரேஷ்மி அம்சமான அழகு என சொல்ல முடியாவிட்டாலும் அடக்கமான குத்து விளக்கு மாதிரி அழகாக வந்து போகிறார். ரேஷ்மியிடம், என்ன ஒரே மைனஸ் என்றால் அவரிடம் காதல் உணர்வுகள், சிரிப்பு இவை எல்லாம் ஸ்விட்ச் போட்ட மாதிரி வந்து போகின்றன. அதாவது டைரக்டர் ஓக்கே சொன்னதும் டக் என்று சிரிப்பதும், ஸ்டார் கேமரா ஆக்ஷன் என்றதும் உடனே காதல்கொள்வதும் லேசான செயற்கை இழை தட்டும் நடிப்பு.
சார்பதிவாளர் நாச்சியப்ப செட்டியாரின் குடும்பத்து உறவுகள் அனைவருமே நிஜமான செட்டி முகங்களாக பார்த்து நடிக்க வைத்திருப்பதற்கு முதல் பாராட்டு. அதிலும் நாச்சியப்ப செட்டியாரின் பண்பட்ட நடிப்பை மறக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர் மிக இளம் வயதானவர். டிரம்ஸ் வாசிக்க வாய்ப்பு கேட்டு வந்த பிரபாகரனை அப்படியே பிடித்து நடிக்க வைத்துவிட்டாராம் குமரன். அவசரத்தில் கட்டிங்கை அடித்துவிட்டு முதல் முறையாக போதையில் புலம்புவது. நிலத்தை முறைகேடாக பதிவு செய்யச் சொல்லிப் பணத்துடன் வரும் நபரிடம் முறைத்து பேசுவது. தலையைக் குனிந்தபடியே தனது மகளால் ஏற்பட்ட அவமானத்தை ஏற்றுக்கொள்வது. மகளுக்காக ஹீரோ அம்மாவின் காலில் விழுவது என்று இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலுமே ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஹீரோவுக்கு அண்ணனாக வரும் கொடுமுடி சுரேஷ், ரசிகர்களை சிரிக்க வைக்க ரொம்பவே முயற்சி செய்திருக்கிறார். சில இடங்களில் இவருடைய உடல்மொழியை பார்த்து சிரிப்பு வந்தாலும், போகப் போக அதுகூட அலுப்பு தட்டுகிறது. ஹீரோயினின் அண்ணன்களாக நடித்திருக்கும் இருவரில் குணாவின் சீரியஸ் பார்வைகூட நம்மை சிரிக்க வைக்கிறது. இவர்களைத் தவிர படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்க மறுக்கிறது. ஹீரோயினை படம் முழுக்க கண்ணியமாக காண்பித்ததற்காகவே இயக்குநரை பாராட்டலாம். ஹீரோவுக்கு பஞ்ச் டயலாக், ஓப்பனிங் ஃபைட், ஃபினிஷிங் ஃபைட் எதுவும் கொடுக்காமல் இயல்பாய் வந்து போக வைத்திருப்பது திருப்தி அளிக்கின்றது.மகள் காதலிக்கிறாள் என்பது தெரிந்ததும், தந்தை மண்ணெண்ணெய் கேனை தூக்கிக்கொண்டு ஓட, அவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக எல்லோரும் பின்தொடர, அவரோ காதலன் போட்ட பந்தலை எரிக்கிறார்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் தன்னை அறியாமலேயே தன் மகளுக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்துவிட்ட சோகத்தில், கதவைப்பூட்டி தாழ்ப்பாள் போட்டுக்கொள்ள, எல்லோரும் பதட்டத்துடன் கதவைத் தட்ட, அதுவரை குடிக்காதவர், இப்போது குடிக்கத் தொடங்கியிருப்பார். இப்படி சில திடீர் திருப்ப காமெடிகள் படத்தை அவ்வப்போது சுவாரஸ்யப்படுத்துகிறது. ஆனால் பெண் வயதுக்கு வரும் விஷயத்தை வைத்து காமெடி செய்வது ரொம்ப ஓவர். குடும்பத்தின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் காதலனுடன் ஓடிப்போவதிலும், பின்பு காரணம் அறிந்துகொள்ளாமலேயே வீட்டுக்கு திரும்புவதும், பிறகு அப்பாவின் திட்டம் அறிந்து மனம் மாறி காதலுடன் செல்வதிலுமாக, ஹீரோயின் ஆடும் கபடி ஆட்டத்தில் அழுத்தம் மிஸ்ஸிங். வில்லன் செயலிலும் சுவாரஸ்யம் இல்லை. படத்தோட ஓப்பனிங் சீன்ல ஹீரோவோட அம்மா உப்பு பெறாத விஷயத்துக்காக தான் செத்துப்போனது போல நடிப்பதும், ஊரே திரண்டு வந்து நின்ற பிறகு சர்வசாதாரனமாக எழுந்து "பார்த்தியா? நான் செத்தா யாரும் வர மாட்டாங்கன்னு சொன்னியே" இத்தனை பேர் வந்திருக்காங்களே என கேட்பது படு மொக்கை. சார்பதிவாளர் மகள் ஏன் பெட்டிக்கடை நடத்தணும் பெட்டிக்கடை நடத்தும் பெண்ணுக்கு அமெரிக்கா மாப்பிள்ளையா அமெரிக்க மாப்பிள்ளையாக நடிக்க ஒரு நல்ல துணை நடிகர் கிடைக்கலையா பொண்ணு வேணாம்னு போன மாப்பிள்ளை திரும்ப ஏன் வர்றாரு இப்படியே கேட்டுட்டே போனா நிறைய கேட்கலாம்.
படத்துல அழகான ரெண்டு விஷயம்: ஒன்னு படத்தோட டைட்டில் டிசைன். டீ நுரை சூப்பர். அப்புறம் ரேஷ்மியோட கலர்ஃபுல் காஸ்ட்யூம்ஸ். ஒளிப்பதிவாளர் மணவாளன் இதுல கொஞ்சம் மின்னுகிறார். தான் ஒரு இசையமைப்பாளர் என்பதால் படத்தில் பாடல்களை திணிக்காமல் தேவைப்பட்ட இடங்களில் மட்டும் அளவான பாடல்களை கொடுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. பாடல் ஆசிரியர் முருகன் மந்திரம் அவர்கள் எழுதிய மூன்று பாடல்களில் இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட். 'ஜில்லென சிரிப்பாளோ, நெஞ்சுக்குள் இனிப்பாளோ' செம மெலோடி. பாடல் வரிகளுக்கும், மென்மையான இசைக்கும் ஒரு சபாஷ் அதே போல் 'அட என்னமோ ஏதோ பண்ணுது புள்ளே...' பாடல் வரிகளும் மனசுக்குள் வந்து என்னமோ ஏதோ பண்ணுது.
காதல் கதைதான் என்றாலும் ஒரு அடிதடி இல்லை வெட்டுக்குத்து இல்லை ரத்தம் சிந்தவில்லை அரிவாள் இல்லை என்பதெல்லாம் இந்தப் படத்தை ஒருமுறை சிரித்து ரசிக்கலாம். ஒரு இசையமைப்பாளராக குறுகிய காலத்தில் வெற்றி பெற்ற எஸ்.எஸ்.குமரன், ஒரு இயக்குநராக வெற்றி பெற இன்னும் சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. |
0 comments:
Post a Comment