சீனாவில் இளம் வயதில் மரணமடைவது அதிகரிப்பு

Monday, July 25, 2011

சீனாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் 72 கோடீஸ்வரர்கள் இளம் வயதிலேயே மரணமடைந்திருப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சீனாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் 70 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் சொத்துக்கள் வைத்துள்ளனர்.

அதே நேரத்தில் சராசரி சீனரை விட இந்த கோடீஸ்வரர்கள் அற்ப ஆயுளில் இறந்து விடுகின்றனர். கடந்த 2003 ம் ஆண்டு முதலான எட்டு ஆண்டுகளில் 72 கோடீஸ்வரர்கள் பல்வேறு காரணங்களால் அற்ப ஆயுளில் இறந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: சீனர்களின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள். ஆனால் சீன கோடீஸ்வரர்களின் ஆயுள் அவர்களை விட மிகவும் குறைவாகவே உள்ளது. கடந்த 2003ம் ஆண்டு முதல் கடந்த எட்டு ஆண்டுகளில் 72 சீன கோடீஸ்வரர்கள் இறந்துள்ளனர். அவர்களில் 15 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொழில் போட்டியாளர்கள் உள்ளிட்டோரால் இந்தப் படுகொலைகள் நடந்துள்ளன. 17 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தங்களது தொழில் நலிவடைந்து ஏற்பட்ட இழப்பின் காரணமாகவே இவர்கள் இப்படிப்பட்ட முடிவை தேடிக்கொண்டுள்ளனர்.
ஏழு பேர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 14 பேர் தண்டனைகள் மூலம் மரணமடைந்துள்ளனர். தவறான வழியில் பணம் சம்பாதிக்க முயன்றதன் காரணமாக இவர்கள் தண்டனை பெற்று மரணத்தை தழுவியுள்ளனர்.
17 பேர் உடல் நலக்குறைவால் இறந்துள்ளனர். உடல்நலக்குறைவால் சராசரியாக தங்களது 48வது வயதில் இறந்துள்ளனர். இதில் இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோய் காரணமாக அதிகம் பேர் இறந்துள்ளனர்.

0 comments:

IP
Blogger Widgets