ஜப்பானில் கடந்த மார்ச் 11ந் திகதி நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் 22 ஆயிரம் பேர் பலியாகினர்.மேலும் புகுஷிமா அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து கதிர்வீச்சு வெளியேறி பரவியது. எனவே கதிர்வீச்சை தடுக்கும் நடவடிக்கையில் ஜப்பான் அரசு தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் அங்கு தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் நிலநடுக்கம் ஏற்பட்ட மியாகி மாகாணத்தின் பசிபிக் கடற்கரை பகுதியில் ஜப்பான் நேரப்படி இன்று மதியம் 1.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பூமி அதிர்ந்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு வீடு திரும்பினர். இதற்கிடையே 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 40 கிலோமீற்றர் ஆழத்தில் இது ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தின் போது தொகோகிஷின்கன்சென் புல்லட் ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதமதிப்பு மற்றும் உயிர் சேதம் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. |
0 comments:
Post a Comment