நோர்வே நாட்டில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 87 பேர் பலியாயினர். பிரதமரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள 20 மாடி அரசு கட்டிடத்தில் நேற்று குண்டு வெடித்தது. இந்த கட்டிடத்தில் தான் பிரதமர் ஸ்டோல்டன்பர்க் அலுவலகம் உள்ளது. சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் கட்டிடம் நொறுங்கியது.
இடிபாடுகளில் சிக்கி 7 பேர் இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு நடந்த போது பிரதமர் ஸ்டோல்டன்பர்க் அலுவலகத்தில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சற்று நேரத்தில் அருகே உள்ள உட்டோயா தீவில் ஆளும் தொழிலாளர் கட்சி கூட்டத்தில் பொலிஸ் வேடமணிந்த மர்ம மனிதன் புகுந்து சரிமாரியாக துப்பாக்கியால் சுட்டான்.
அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். துப்பாக்கி சூட்டில் 80 பேர் பலியானதாக பொலிசார் தெரிவித்தனர். பலர் படுகாயம் அடைந்திருப்பதால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த கூட்டத்திலும் பிரமதர் ஸ்டோல்டன்பர்க் பங்கேற்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பிரதமரை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவனை பொலிசார் நேற்றிரவு கைது செய்தனர். இரு தாக்குதல்களிலும் அவன் ஒருவனே ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். இச்சம்பவத்தில் சர்வதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பு இல்லை என்றும், மனநிலை பாதித்தவரின் செயல் போல் உள்ளது என்றும் பொலிஸ் அதிகாரிகள் கூறினர்.
நோபல் பரிசு வழங்கும் விழா ஒஸ்லோ நகரில் தான் நடத்தப்படும். இந்த நகரில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் ஸ்டோல்டன்பர்க் கூறுகையில்,"இந்த தாக்குதல்களால் நோர்வேயின் அமைதியை குலைக்க முடியாது. இதற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர்" என்றார்.
நோர்வே பிரதமரை கொல்ல சதி: பொலிஸ் தீவிர விசாரணை
Monday, July 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment