இந்தியாவுக்கு எதிராக மறைமுகப் போர் தொடுக்க திட்டமிடும் பாகிஸ்தான்: அமெரிக்க தளபதி

Monday, July 25, 2011

இந்தியாவுக்கு எதிராக மறைமுகப் போர் தொடுப்பதற்காகவே பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது என்று அமெரிக்க முப்படைகளின் துணைத் தளபதி அட்மிரல் ஜேம்ஸ் ஏ.வின்னிபீல்ட் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் பயங்கரவாத ஊக்குவிப்பு நடவடிக்கை குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்த அறிக்கையில் அவர் இத்தகவலை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மறைமுகப் போர் தொடுப்பதற்காகவே பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதேபோல பாகிஸ்தான் ராணுவமோ இந்தியாவை ஒரு எதிரி நாடாகவே சித்தரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கனிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தலையிடுவது தங்களுக்கு அச்சுறுத்தல் என தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் குறிப்பிட்டு வருகிறது. இதன் மூலம் பிற நாடுகளின் அனுதாபத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயன்று வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ரஷிய படைகள் நுழைந்தபோது அதை எதிர்த்துப் போராடிய குழுக்களை பாகிஸ்தான் ராணுவம் ஊக்குவிக்கிறது. ரஷிய படையை விரட்ட உதவியதற்கு நன்றிக் கடனாக இக்குழுக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி வருகிறது.
ஆனால் பாகிஸ்தான் ராணுவம் புலி வாலைப் பிடித்துவிட்டது என்றும் எச்சரித்துள்ளது. ஒருகட்டத்தில் பயங்கரவாத குழுக்களே பாகிஸ்தான் ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் என்ற விபரீதத்தை அவர்கள் உணரவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில பயங்கரவாத குழுக்களை ஊக்குவிக்கும் முடிவை சில ஆண்டுகளுக்கு முன்னரே பாகிஸ்தான் எடுத்துவிட்டது. இது மிகவும் மோசமான அணுகுமுறை என்பதை அந்நாடு உணரவில்லை. இது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும். ஹக்கானி குழுமத்தின் செயல்பாடுகள் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
பாகிஸ்தானுடனான நட்புறவைத் தொடர்வது என்பது மிகவும் சிக்கலானது. இதை அனைவரும் உணர்ந்தே உள்ளனர். ஆனால் பல சமயங்களில் இந்த கருத்தை உலகம் முழுவதற்கும் வெளிப்படுத்துவதில் நம்மிடையே தயக்கம் நிலவுகிறது.
தேச நலன் கருதி பல சமயங்களில் மெளனமாக இருப்பதுதான் பல சமயங்களில் ஆபத்தாக அமைந்துவிடுகிறது என்றும் வின்னிபீல்ட் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பயங்கரவாதிகள் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நெருக்குதல் அளிக்க வேண்டும். ஹக்கானி குழு பாகிஸ்தானுக்கே மிகுந்த அச்சுறுத்தலாக மாறிவருவதை உணர்த்த வேண்டும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹக்கானி குழுவின் பயங்கரவாத நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி ஆப்கனிஸ்தானுக்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்பதை உணர வேண்டும். சமீபத்தில்தான் அரசியல் தலைவர்கள் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளனர்.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் கிடைத்த ஓரளவு வெற்றியை பாகிஸ்தானுக்கு உணர்த்தி வெளியில் உள்ள அச்சுறுத்தலைவிட உள்நாட்டு அச்சுறுத்தல் மிகவும் பயங்கரமானது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
அனைத்து பயங்கரவாத குழுக்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை அந்நாட்டுக்கு உணர்த்த வேண்டும் என்றும் அறிக்கையில் வின்னிபீல்ட் கூறியுள்ளார்.

0 comments:

IP
Blogger Widgets