பொருளாதார அழிவில் இருந்து காப்பாற்றப்பட்ட கிரீஸ்

Monday, July 25, 2011

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ், ஐயர்லாந்து, போர்சுகல் நாடுகளை பொருளாதார அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மாநாட்டில் வரைவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

கிரீஸ் நாட்டின் கடன் கடந்த ஆண்டு 340 பில்லியன் யூரோவை எட்டியது. இதையடுத்து அந்த நாடு கடன்களை திருப்பிக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் கிரீஸுக்கு கடன் கொடுத்த சில ஐரோப்பிய நாடுகளுக்கு நிதி நெருக்கடி ஏற்படும் சூழல் மட்டும் இல்லாமல் யூரோவிற்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. ஒரு கட்டத்தில் ஜேர்மனி யூரோவை விட்டு தனது பழைய நாணயமான டாய்ச் மார்க்கிற்கு திரும்ப தயாராக உள்ளதாக அறிவித்தது.
இதனால் கிரீசிற்கு கடன் பிரச்னையை சமாளிக்க கடந்த ஆண்டு மே மாதம் யூரோ பயன்படுத்தும் சில நாடுகளும், ஐ.எம்.எப் அவசர நிதி நிறுவனமும், 110 பில்லியன் யூரோ வழங்கின.
மேலும் இதே போன்ற நிதி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 85 பில்லியன் யூரோ ஐயர்லாந்துக்கும், இந்த ஆண்டு மே மாதம் 78 பில்லியன் யூரோ போர்சுகலுக்கும் வழங்கப்பட்டன.
மேலும் சில நாடுகள் கடன் பிரச்னையால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் ஐரோப்பியன் பைனான்ஷியல் ஸ்டெபிலிடி பெசிலிடி(யூரோப்பிய நிதி ஸ்திரத் தன்மை பாதுகாக்கும் வசதி) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இதன் மூலம் நிதி பிரச்னையில் உள்ள நாடுகளின் சார்பாக  ஐரோப்பிய யூனியன் கடன் பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்டித் தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தால் 440 பில்லியன் யூரோ வரை யூரோப்பிய யூனியன் சார்பில் கடன் வாங்க முடியும்.
அதே சமயம் கிரீஸ் போன்ற நாடுகளில் அரசு செலவுகள் கடுமையாக குறைக்கப்பட்டன. இதற்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதை தவிர மேலும் சில நிதி அமைப்புகள் உருவாக்கப்பட்டு கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும் கிரீசால் தனது கடனை திரும்பக் கொடுக்க முடியாத சூழ்நிலை மறுபடியும் எழுந்துள்ளது.
கிரீஸ் மற்றும் நிதி நெருக்கடியில் உள்ள ஐரோப்பிய நாடுகளை காப்பாற்றும் வகையில் இரண்டாம் முறை அந்த நாடுகளுக்கு நிதி உதவி மற்றும் கடன் காலத்தை தளர்த்தும் நடவடிக்கைகளை எடுக்க மற்ற ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததில் பெரும் கருத்து வேறுபாடு நிலவியது.
பிரதானமாக பிரான்ஸ், ஜேர்மனி இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. ஜேர்மனியின் கருத்தில் கிரீஸ் போன்ற நாடுகளின் நிதியை சீர் செய்வது மிகவும் கடினம் என்பதால் கடன் கொடுத்தவர்களின் பணத்தில் ஒரு பகுதியை திரும்பக் கொடுக்காமல் இருப்பது தான் சரி என்று கூறி வந்தது.
இது ஐரோப்பாவில் மற்ற நாடுகளின் கடன் வாங்கும் தகுதியை குறைத்து விடும் என்பதால் பிரான்ஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பிரச்னை உச்சகட்டத்தை எட்ட நேற்று பிரான்ஸ் நாட்டு அதிபர் சர்கோசியும், ஜேர்மனி நாட்டு அதிபர் மெர்கலம் சந்தித்து வித்தியாசங்களை தீர்த்துக்கொண்டனர்.
இதையடுத்து இன்று ஐரோப்பிய யூனியனின் பிரஸல்ஸ் மாநாட்டில் யூரோப்பில் நலிவடைந்து வரும் அனைத்து நாடுகளுக்கும் பொருளாதார ஊக்கத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் படி கிரீஸ் மட்டும் அல்லாமல் அபாயத்தில் உள்ள ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்கும் புதிய கடன் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
அதே நேரம் சில பழைய கடன்கள் அடைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானவுடன் டொலருக்கு எதிரே யூரோவின் விலை உயர்ந்தது. திட்டத்தின் முழு வடிவம் நாளை தெரியவரும் என்றாலும் நிதி சந்தைகள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளன.

0 comments:

IP
Blogger Widgets