அமெரிக்கா தற்போது தனது பெரும் கடன் சுமையில் இருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது.
தற்போதைய சூழலில் சீனா தன்னைக் காத்துக் கொள்வதற்கு மிகச் சில வழிகளே இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் மொத்தக் கடன் தற்போது 14.3 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனா கடன் பத்திரங்களாக அமெரிக்காவிடம் இருந்து 1.16 டிரில்லியன் டொலர் அளவுக்கு வாங்கியுள்ளது.
2010 அக்டோபரில் இது 906 பில்லியன் டொலராக இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் இருந்து கடன் பத்திரங்கள் வாங்கியுள்ளன. பெரும் கடன் சுமையில் அமெரிக்கா மூழ்குவதை இரண்டாண்டுகளுக்கு முன்பே சீனா உணர்ந்திருந்தது.
2009 மார்ச் 12ம் திகதி உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபோ கூறியதாவது: அமெரிக்காவுக்கு பெரிய அளவில் கடன் அளித்துள்ளோம். அதுபற்றி எங்களுக்குக் கவலை ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாகச் சொல்வதானால் நான் கவலையில் ஆழ்ந்துள்ளேன்.
அமெரிக்காவின் வார்த்தைகளில் சொல்வதானால், நம்பகத் தன்மையை நிலைநிறுத்துங்கள். சீனச் சொத்துக்களின் பாதுகாப்புக்கு உறுதியளியுங்கள் என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம் இதுகுறித்துப் பேசிய சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ,"முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பொறுப்பான கொள்கை முடிவுகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என நம்புகிறோம்" என்றார்.
சீனாவிடம் தற்போது அன்னிய செலாவணி இருப்பு 3 டிரில்லியன் டொலர். பிற நாடுகள் எதுவும் இந்தளவுக்கு அன்னிய செலாவணி இருப்பை மேற்கொள்ளவில்லை. இந்த இருப்பில் பெரும்பான்மை டொலர் வடிவில் தான் உள்ளன. இவை மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் கடன் பத்திரங்கள் மற்றும் டொலர் தொடர்பான பல்வேறு வடிவங்களில் பங்குச் சந்தை உட்பட அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப்படுகின்றன.
உள்நாட்டுச் சேமிப்பை ஊக்குவித்தல், சீன நாணயமான ரென்மின்பியின் மதிப்பை டொலரை விடக் குறைத்து வைத்துக் கொள்ளல் போன்றவை அக்கொள்கைகளில் குறிப்பிடத்தக்கவை.
ஆனாலும் அமெரிக்க பொருளாதார இறங்குமுகம், சீனாவின் வளர்ச்சிக்கு சிக்கலைத் தரும். சீனத் தயாரிப்புகளை அமெரிக்கா வாங்குவதைக் குறைத்தால் கூட வேலைவாய்ப்பு அளவு சீனாவில் குறையும்.
அதே சமயம் டொலர் பரிமாற்ற வர்த்தகம் என்பது உலகில் முன்னணியில் இருப்பதால் சீனா தன் நிலையை சாதகமாக்கிக் கொள்ள அமெரிக்காவிடம் சில புதிய ஏற்றுமதிக் கொள்கை அணுகுமுறையைக் கூட பின்பற்றலாம்.
தற்போது அமெரிக்காவின் சிக்கலான நிலை சீனாவையும் பெரும் சிக்கலுக்குள் தள்ளியுள்ளது. இதனால் சீனா தன்னை காத்து கொள்வதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சீன பொருளாதார நிபுணர் யாவோ வெய் கூறியதாவது: இது அமெரிக்கா, சீனாவுக்கு ஒரு எச்சரிக்கை. சீனாவுக்கு குழப்பமான சூழல். அமெரிக்க டொலரில் கடன் பத்திரங்களை வாங்குவது குறித்து சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் டொலர் பாதுகாப்பானதா என்பது பற்றி யோசிக்க வேண்டும். தனது அன்னிய செலாவணி இருப்பைக் குறைப்பது, ரென்மின்பியை உலகளவிலான நாணயமாக்குவது, அன்னிய செலாவணி இருப்பை வேறு நாணயங்களில் முதலீடு செய்வதன் மூலம் பொருளாதார தடுமாற்றத்தை சீனா தடுத்து நிறுத்த முடியும். ஆனால் அதிக தாமதம் சீனாவுக்கு அபாயமானது.
கடனில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா: கவலையில் சீனா
Wednesday, July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment