சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதா என்று கூறி அமெரிக்க நாட்டின் தூதரை அழைத்து சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பு சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரியை ஞாயிற்றுக்கிழமை அழைத்து சீனா தனது கண்டனத்தைத் தெரிவித்தது. சீனாவின் வெளியுறவு துணை அமைச்சர் சூ தியாங்க், பெய்ஜிங்கிலுள்ள அமெரிக்கத் தூதரக வெளியுறவுத்துறை பொறுப்பாளர் ராபர்ட் எஸ். வாங்க்கை அழைத்து கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
சீன நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மா ஸ்ஹாஓக்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தலாய் லாமாவை ஒபாமா சந்தித்திருப்பது சீன நாட்டு உள் விவகாரத்தில் தலையிடுவது ஆகும். மேலும் இது சீனா-அமெரிக்க நாடுகளுக்கு இடையே உள்ள உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இது சீன மக்களின் உணர்ச்சிப்பூர்மான பிரச்னை. அதில் அமெரிக்கா தலையிட்டுள்ளது. இதை சீன மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சீன உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்க உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தலாய் லாமாவுடன் ஒபாமா சந்தித்தை சீனா மிகவும் முக்கியப் பிரச்னையாக எடுத்துக் கொண்டுள்ளது. சீனாவின் இந்த எதிர்ப்பை அமெரிக்கா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி செயல்பட வேண்டும்.
திபெத் குறித்த தனது நிலையை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். திபெத் விவகாரம் முற்றிலும் சீனாவின் உள்நாட்டு விவகாரமாகும். இதில் மற்ற நாடுகள் தலையிடுவதை சீனா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
ஆன்மிகத்தின் பெயரால் அவர் நாட்டை பிரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சீன விவகாரம் குறித்து எந்த நாடு தலாய் லாமாவுடன் பேச்சு நடத்தினாலும் அந்த நாட்டை சீனா கடுமையாக எதிர்க்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல வாஷிங்டனில் உள்ள சீனத்தூதர் ஸஹாங்க் யசையும் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்து சீனாவின் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்த பிறகு தலாய் லாமா கூறியதாவது: ஒபாமா மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராவார். இதனால் இயற்கையாகவே மனித நேயம், மனித உரிமைகள், மத சுதந்திரம் ஆகியவை காக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளது. இந்த சந்திப்பு திபெத்தியர்கள் அவர்களது மத வழிபாட்டையும், சுதந்திரத்தையும் காக்க வேண்டும் என்பதற்கு பலமான ஆதரவாக அமைந்துள்ளது என்றார்.
தலாய் லாமாவுடனான சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சீனாவின் ஒரு அங்கம் திபெத் ஆகும். இது அமெரிக்காவின் கொள்கையாகும். திபெத் சுதந்திரம் அடைய வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்காது.
அதே நேரத்தில் திபெத்தியர்கள் உரிமையுடன் அவர்களது கடமைகளைச் செய்ய வழி காணப்படவேண்டும். இதற்கு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது: சீனா கடும் கண்டனம்
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment